சனி, 27 நவம்பர், 2010

இவரு தான் இந்த பிளாக் எழுத இன்ச்பிரேசன்!!!!!


உன்னைவிட நல்லவன்?


ஒருவர் இறந்த பின்னர் மக்கள் அவரைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். குரு தன் சீடரை அழைத்து,
நீ சென்று இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்று பார்த்துவா என்றார்.

திரும்பிய சீடர், குருவிடம் சொன்னார்.

குருவே இறந்தவர் சொர்கத்துக்குத் தான் செல்கிறார் என்று.

குருவைப் பார்க்க வந்த ஒருவர் இதனைப் பார்த்து வியப்படைந்தார்.
ஒருவர் இறந்தபின்னர் சொர்க்த்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்பதைப் பார்க்கமுடியுமா? என்று குருவிடம் கேட்டார்.

குரு சொன்னார்,

ஒருவரின் இறுதி ஊர்வலமே இறந்தவரின் வாழ்க்கைக்கான அடையாளம். அவர் நல்லவரா? தீயவரா? என்பதை அவருக்குப் பின் செல்லும் மக்கள் பேசிச் செல்வர். அவர்கள் இவரைப் பற்றி உயர்வாகப் பேசினால் இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறார் என்றும், அவரைப் பற்றி இழிவாகப் பேசினால் அவர் நரகத்துக்குப் போகிறார் என்றும் உணர்ந்து கொள்ளலாம் என்றார் குரு.

சொர்க்கம்,நரகம் இரண்டும் மனித நம்பிக்கையின், நெறி்ப்படுத்தும் முயற்சியின் அடையாளங்கள்.

பாரதியார் இறந்த பின்னர் அவர் உடலில் மொய்தத் ஈக்களின் எண்ணிக்கை கூட அவரைப் பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கை இல்லை!

பாரதியார் நல்லவரா? தீயவரா?

பாரதி சொர்க்கத்துக்குச் செல்வாரா?
நரகத்துக்குச் செல்வாரா?

பாரதி நல்லவர் தான்! அவர் சொர்கத்தில் தான் வாழ்கிறார்.
ஆம் இன்னும் அவரின் சிந்தனைகள் மறையவில்லையே.
மக்களின் மனம் என்னும் சொர்க்கத்தில் தானே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி நல்லவர் தீயவர் என்பதற்கான வரையறை நிலையானதல்ல.

நல்ல பண்புகளைக் கொண்ட ஒருவரை தீயவராக எண்ணுதலும்
தீய பண்புகளைக் கொண்ட ஒருவரை நல்லவராக எண்ணுதலும் இவ்வுலகத்தின் இயல்பு.

ஒருவரின் மரணத்தி்ன் பின்னரே அவர் நல்லவர், தீயவர் என்பதை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வர்.


கரிகாலன் சேரலாதனைப் போரில் வென்றான்.
சேரலாதன் தன் மார்பில் தைத்த வேல் முதுகு வழியே வந்ததால் புறப்புண் என நாணி வடக்கிருந்தான்.

இருவரில் யார் நல்லவர்?

இதனை உணர்த்துகிறது இப்பாடல்,

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!

66. புறநானூறு.
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை : அரச வாகை.


நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே!

மதங்கொண்ட ஆண்யானையை உடைய கரிகால் வளவனே!

போருக்குச் சென்ற நீ ஆற்றல் தோன்ற வெற்றி கண்டாய்!

புதுவருவாயையுடைய வெண்ணியில் ஊர்ப்புறத்தில் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பி, புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் உன்னை விட நல்லவன் அல்லவா?


பாடல் உணர்த்தும் கருத்து.


­1. அரசனின் இயல்பு கூறும் அரசவாகை என்னும் புறத்துறை சுட்டப்படுகிறது.

­2.காற்றினை ஏவல் கொண்டு மரக்கலத்தைச் செலுத்தியும், காற்றில்லாதபோது அதனைத் தம் ஆளுகைக்கு உட்படுத்தி மரக்கலத்தைச் செலுத்தும் சோழரின் மாண்பும்,

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

என்னும் அடிகளால் உணர்த்தப்படுகின்றன. இதனால் பழந்தமிழரின் கடல் வணிகமும், கப்பல் செலுத்தும் அறிவும், ஆற்றலும் புலப்படுகின்றன.
­
3. எல்லா வெற்றியும் வெற்றியல்ல!
எல்லாத் தோல்வியும் தோல்வியல்ல!
ஒவ்வொரு வெற்றிக்குள்ளும் ஒரு தோல்வி உள்ளது!
ஒவ்வொரு தோல்விக்குள்ளும் ஒரு வெற்றியுள்ளது!

என்னும் அறிய வாழ்வியல் தத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.


4.போரில் வென்ற சோழனின் வெற்றியை விட,

போரில் தோற்றாலும் மானத்துக்கு அஞ்சி உயிரைவிட எண்ணும் சேரலாதன் நல்லவனாகப் புலவர் கண்ணுக்குப்படுகிறான்.

இப்புலவர் சொல்கிறார் கரிகாலனே நீ நல்லவனே!
ஆனால் உன்னைவிட நல்லவன் சேரன்!

என்று.

5.வாழும் போது நம்மை யார்யாரே நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்வார்வகள்.

நாமும் நம்மைப் புகழும் போது அகமகிழ்ந்தும், இகழும் போது வருந்தியும் வாடுவோம்.

நாம் நல்லவர் என்பதும் தீயவர் என்பதும் அவர்களின் வார்த்தையிலில்லை.
நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறதே என்னும் வாழ்வியல் நுட்பமே இப்பால் உணர்த்தும் கருத்தாக அமைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக