வியாழன், 30 டிசம்பர், 2010

சிங்களத் தீவினிர்கோர் பாலம் அமைப்போம்.!! இதப்பாத்து..!!!!!


டென்மார்க்கையும் சுவீடனையும் இணைக்கும் ஒர்சன் பாலம்(Øresundsbron)

ஒருவொருக்கொருவர் புரிந்துகொள்ள கூடிய மொழிகளையும் கலாச்சாரத் தொடர்புகளையும் காலங்காலமாக கொண்டிருந்தாலும் வெறும் 16 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட நீரிணைப்பு இரண்டு நாடுகளை ஏனோ நூற்றாண்டுகளாக தள்ளியே வைத்திருந்தது. இதனை மாற்றிய பெருமை மனிதனின் பொறியியற் அறிவுக்குச் சவால் விடப்பட்டு கட்டப்பட்ட ஒர்சன் பாலத்தையேச் சாரும்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் டென்மார்க்கையும் சுவீடனையும் இணைத்து ஒரு பாலம் இருந்தால் நன்றாக இருக்குமே இரு நாட்டவர்களுக்கும் தோன்றினாலும் உலகப்போர்கள், பொருளாதாரக் காரணிகளால் பாலம் ஒரு கனவாக இருந்து வந்தது. நார்டிக் ஒப்பந்தங்கள், ஐரோப்பா ஒரு ஒன்றியமாக இணைய ஆரம்பம் ஆதல், முதலாளித்துவ மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும் , பூகோள ரீதியில் தனிமைப்பட்டிருக்கும் சுவீடன் , நார்வே நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் இருந்து செல்ல தரைவழியாகவும் இணைக்கப்பட வேண்டிய தேவைகள் ஆகியன 90களின் ஆரம்பத்தில் பாலம் அமையவதற்கான முகாந்திர வேலைகள் துவங்கப்பட்டன.

உலகத்தின் வியாபர மையமாக கிடுகிடுவென வளர்ந்து வந்த டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகர் மக்களுக்கு தேவையான மலிவான குடியிருப்புகள் , சுவீடனின் மூன்றாவது பெரியநகரமான மால்மோ வாழ் மக்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் ஆகியனவற்றை இந்தப் பாலம் ஒரு சேர பூர்த்தி செய்யும் என்பதால் இருநாட்டு மக்களிடையேயும் பாலம் அமைக்கும் திட்டம் பெரு வாரியான வரவேற்பைப் பெற்றது.

சேவைநோக்குடன் ஆரம்பிக்கப்படும் விசயங்கள் அரசின் கையில் மட்டுமே இருக்கவேண்டும் என்பதற்கு இணங்க டென்மார்க் , சுவீடன் அரசாங்கங்கள் இணைந்து Øresundsbro Konsortiet என்ற கூட்டமைப்பு நிறுவனத்தை ஆரம்பித்தன. இதை நிர்வகிக்கும் கூட்டுப் பொறுப்பு சுவீடன் தரப்பில் SVEDAB AB என்ற அரசாங்க நிறுவனத்திற்கும் A/S Øresund என்ற டேனிஷ் அரசாங்க நிறுவனத்திற்கும் கையளிக்கப்பட்டன. பொதுவாக பெரும் தடைக்கற்கள் எனக் கருதப்படும் உள்ளூர் , உள்ளடி அரசியல்களை எல்லாம் அனயாசமாக கடந்த இந்தத்திட்டத்திற்கு நிஜமான சவால் கட்டுமானத்திட்டத்தை வடிவமைப்பதில் தான் இருந்தது.



பால்டிக் கடலை வட அட்லாண்டிக் பெருங்கடலுடன் இணைக்கும் முக்கிய நீரிணைப்பான 'சத்தம்' எனப் பொருள்படும் ஒர்சன் நீரிணைப்பு டென்மார்க்கையும் சுவீடனையும் பிரிக்கின்றது. இந்தப் பாலம் அமைக்கப்படும் முன்னர் கழுத்தைப்போன்ற குறுகலான இடம் என்ற பொருள் படும் பெயர்களைக் கொண்ட ஹெல்சிங்கர்(டென்மார்க்) - ஹெல்சிங்கர்போரி (சுவீடன்) நகரங்களுக்கு இடையேயான இரண்டரை கிலோமீட்டர்கள் தொலைவை 20 நிமிடங்களில் கடக்க சிறுகப்பல்களைத் தான் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஏற்கனவே சொன்னபடி, கோபன்ஹேகன், மால்மோ பெரியநகரங்களை இணைத்தால் கிடைக்கும் அரசியல்,பொருளாதார ஆதயங்களினால் பாலத்திற்கான வேலைகள் முடுக்கிவிடப்பட்டு 1995 ஆம் ஆண்டின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டன.

பால வடிவமைப்பிற்கு இரண்டு பிரச்சினைகள் காத்திருந்தன. முதலாவது ஒர்சன் நீரிணைப்பின் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துப் பாதிக்கப்படக்கூடாது. அதாவது பாலம் மிகப்பெரிய கப்பல்கள் கடந்து செல்லும் அளவிற்கு உயரமானதாகவும் அகலமானதாகவும் கட்டப்பட வேண்டும். இரண்டாவது டென்மார்க் நிலப்பகுதியில் அமைந்திருந்த கோபன்ஹேகன் - காஸ்ட்ரப் பன்னாட்டு விமானநிலையம். கடலுக்கு மேல் உயரமாக பாலம் அமைக்கப்படும்பொழுது தரையிறங்கும் விமானங்கள் , தாழ்வாகப் பறக்கையில் உயர்ந்த கோபுரங்களை கொண்டு தாங்கும் பாலத்தின் மேல் மோதி விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும். முழுக்க முழுக்க கடலுக்கு அடியில் கட்டலாம் என்றாலும் செலவு இதைவிடப் பன்மடங்கு ஆகும்.

இதனால் பொறியியலாளர்கள் கோபன்ஹேகன் விமான நிலையத்தின் அருகே வரும் கடல் பகுதியில் சில கிலோமீட்டர்கள் பாலத்தை கடலுக்கடியிலும் , அதன் பின்னர் கடலுக்குமேலும் பாலத்தை அமைக்கலாம் எனத் திட்டமிட்டனர். ஆனால் நடுக்கடலில் , அடியில் இருக்கும் பாலத்தை எப்படி கடலுக்கு மேல் கொண்டு வருவது, அடுத்தச் சிக்கல் ஆரம்பித்தது. நடுக்கடலில் இருக்கும் உப்புத்தீவில்(saltholm) கடலுக்கடியில் இருந்து கடலுக்கு மேல் மாற்றிவிடத் முதலில் திட்டமிடப்பட்டது.



ஆனால் முதலாம் உலகப்போருக்குப்பின்னர் ஆளரவமற்ற தீவாகிவிட்ட உப்புத்தீவில் சாலைகளையும் ரயில் பாதைகளையும் அமைக்கும் செலவைக் காட்டிலும் , ஏற்கனவே நீரின் வேகத்தைக் குறைக்க, தோண்டப்பட்ட மண்ணைக் கொண்டு செயற்கைத் தீவை உருவாக்கும் செலவு குறைவாகப் பட்டதனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக செயற்கைத் தீவு உருவாக்க திட்டமிடப்பட்டது. செயற்கைத் தீவிற்கு Salt and Pepper என்ற சொற்றொடரை மதிப்புச் செய்யும் வகையில் மிளகுத்தீவு(Peberholm) எனப் பிற்பாடு பெயரும் சூட்டப்பட்டது.

4 கிலோமீட்டர்கள் கடலுக்கடியிலும், 4 கிலோமீட்டர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவிலும், மீதி எட்டு கிலோமீட்டர்களை கடலுக்குமேல் பாலத்தையும் அமைத்து நூற்றாண்டுகள் கனவை நிஜமாக்கலாம் என பொறியியளாலர்கள் திட்டமிட்டனர்.

பொதுவாக கப்பல் பாலத்தின் அடியில் போக வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 60 மீட்டர்களாவது பாலம் உயரமாக இருக்க வேண்டும். அகலம் 450 மீட்டர்களாகவது இருக்க வேண்டும். இவ்வகையில் மிகப்பிரம்மண்டமான பாலத்தை கட்ட வேண்டுமெனில் வளைவுப் பாலம் அல்லது தொங்கு பாலம் வடிவமைப்புகளே தேர்ந்தெடுக்கப்படும். ஆனால் வளைவு பாலத்தை அமைத்தால் கப்பல் போக்குவரத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதாலும், ரயில் போக்குவரத்தின் அதிர்வுகளை தொங்குபாலங்களால் தாங்க இயலாது என்பதாலும் இரண்டு வடிவமைப்புகளும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பாலத்தை வடிவமைக்கும் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்தி இரண்டு உயரமான தூண்களில் இருந்து கம்பிகளால் இறுக்கமாக பிணைக்கப்பட்டு இருக்கும் தற்போதைய வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் ஜார்ஜ் ரோத்னே



சுற்றுப்புறச் சூழல் விதிமுறைகளை மீறாமல், அகழந்து தோண்ட முடியாத நடுக்கடலில் கொட்டிக்கிடந்த கோபன்ஹேகன் சுண்ணாம்புக் கற்களை ராட்சச இயந்திரங்களை வைத்து உடைத்தெடுத்தாலும் பிரச்சினை வேறு வடிவில் காத்துக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியக் கட்டுப்பாட்டில் இருந்த டென்மார்க் மீது பிரிட்டன் வீசிய குண்டுகளில் சிலவை ஆழ்கடலில் வெடிக்காமல் உயிர்ப்புடன் அப்படியே இருந்தன. டேனிஷ் கடற்படையினரின் தொடர்ந்த தேடுதல்களினால் 16 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கப்பட்டன.

இதனிடையில் கடலுக்கடியில் சுரங்கம் அமைக்கும் பணிகளும் இணையாகத் தொடங்கப்பட்டிருந்தன. நிலத்துக்குமேல் கட்டுவதுபோல அத்தனை சுலபமாக கடல் மட்டத்திற்கு கீழ் நீரின் மத்தியில் கட்டுமாணம் செய்வது அத்தனை சுலபமில்லை. 8.6 மீட்டர்கள் உயரமும் 38.8 மீட்டர்கள் அகலமும் கொண்ட 22 மீட்டர்கள் நீளமும் கொண்ட கட்டுமாணங்கள் கடலுக்குள் இறக்கப்பட்டு இணைக்கப்பட்டன. மூன்று மாடி நடுத்தர குடியிருப்புக் கட்டடம் நகர்த்தி நீருக்கடியில் வைப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுபோல ஒன்று இரண்டல்ல, மொத்தம் 160 கட்டுமாணங்கள் கடலின் அடியில் இறக்கப்பட்டு ஏறத்தாழ முன்றரை கிலோமீட்டர்களுக்கு சுரங்க ரயிலுக்கான கட்டுமானங்களும் அமைக்கப்பட்டன.




பாலத்தை தாங்கி கம்பீரமாக நிற்கும் நான்கு தூண்களின் அடித்தளம் நிலத்தில் உருவாக்கப்பட்டு, மறுமுனையில் சுரங்கங்கள் கடலினுள் இறக்கப்பட்டதுபோல, இறக்கப்பட்டன. பின்பு நடுக்கடலில் 204 மீட்டர்கள் உயரத்தில் கட்டப்பட்டு, இரண்டடுக்கு பாலங்கள் பகுதி பகுதியாக கொண்டுவரப்பட்டு இணைக்கப்பட்டன. அதாவது 12 மீட்டர்கள் மடங்கின் உயரத்தில் வரும் இரும்புக் கம்பிகளுடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டன.






ஆகஸ்ட் 14 , 1999 அன்று கடைசிப் பாலத்துண்டு பொருத்தியவுடன் முதன்முறையாக டென்மார்க்கும் சுவீடனும் இணைக்கப்பட்டது. நடுப்பாலத்தில் சுவீடனின் இளவரசி விக்டோரியாவும் டென்மார்க் இளவரசர் பிரட்ரிக்கும் சந்தித்துக் கொண்டபொழுது நூற்றாண்டுகால ஸ்காண்டிநேவியக் கனவு நிறைவேறியது.




சிறிய சிறிய தடைக் கற்களான ரயில் சமிஞைகள், மின்னழுத்த, மின்னோட்ட தரக்காட்டுப்பாடு சிக்கல்கள் மென்பொருள்கள் உதவியுடன் களையப்பட்டன. திட்டமிட்டக் காலத்தில், திட்டமிட்டதற்கு மேலாக செலவு ஆகாமல் குறித்தக் காலத்தில் மக்களுக்கு பயன்பாட்டிற்குத் திறந்த்துவிடப்பட்டது.

2000 ஆம் ஆண்டுக் கணக்குப்படி 30 பில்லியன் டேனிஷ் குரோனர்கள் செலவிடப்பட்டத் தொகையைத் திரும்பப் பெற பாலத்தைக் கடக்க கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அதிகமான கட்டணத்தினால் பயன்பாடு குறைவாக இருந்தபோதிலும், டேனிஷ்காரர்கள் மால்மோ சுற்றுப்புறங்களில் வீடு, நிலங்களை வாங்கிக் குடியேறி, தினமும் கோபன்ஹேகனிற்கு தினமும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டதாலும் ,டென்மார்க்கில் இருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் சுவிடீஷ் மக்களை அங்கு நகர்த்த ஆரம்பித்துள்ளதாலும் இந்தப் பாலத்தின் பயன்பாடு எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 2035 ஆண்டில் செலவிடப்பட்டத் தொகை திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பரமாரிப்புகளுக்காக ரயில் அடுக்கு கீழே அமைக்கப்பட்டிருக்கும் பாதைகளில் பணியாளர்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் செல்ல வழிவகுக்கப்பட்டிருக்கிறது. வாகனப்போக்குவரத்தையும் பாலத்தின் பாதுகாப்பையும் கண்காணிக்க அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளுடன்(256 கேமராக்கள்) கட்டுப்பாட்டு மையமும் உண்டு.

பாலம் வந்தால் எல்லாம் நாசமாய் போகும் எனக் கதறிய சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களுக்கு நல்ல செய்தியாக பாலம் அமையப்பட்டிருக்கும் 51 தூண்களும் அதில் உருவாகும் பாசிகளும், கடற்புற்களும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எதிர்பாராத புகலிடமாக அமைந்த்துவிட்டன. இயற்கை சிலப்பல சமயங்களில் மனித சமுதாயத்திற்கு தேவையான முன் முயற்சிகளுக்கு ஏற்றாற்போல தன்னையும் தகவமைத்துக்கொள்ளும். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மிளகுத்தீவில் மனிதநடமாட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.மனித முயற்சிகள் இல்லாமல் நூற்றுக்கணக்கான தாவரங்கள் இதுவரை உருவாகி இருப்பதாக தாவரவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் தங்குமிடமாகவும் இது அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அருகில் சுவீடனின் முனையில் இருக்கும் ஃபோல்ஸ்டர்ப்ரோ ஒரு பறவைகளின் சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தின் மிகப்பெரும் நீருக்கடியில் இருக்கும் கான்க்ரீட் சுரங்கம், நீளமான இரண்டடுக்கு போக்குவரத்துப்பாலம் , உயரமான கோபுரங்களைக் கொண்ட பாலம் ஆகிய பெருமைகளைக் கொண்ட இந்த இணைப்பு இரண்டு நாடுகளையோ மட்டும் இணைக்கவில்லை, ஒட்டுமொத்த ஐரோப்பாவை மேலும் நெருக்கமாக்கியது என்பது மிகையில்லை.



இந்த பத்தாண்டுகளில் டென்மார்க்கின் ஜிலாந்து, சுவீடனின் ஸ்கோனே மாநிலங்கள் இணைந்து ஒர்ரெசன் என்ற பலம் வாய்ந்த பொருளாதர நிலப்பரப்பாக அமைய காரணமான இந்த கம்பீரமான பாலம் நமக்கு சொல்லாமல் சொல்வது ஏராளம். நூறு வருடங்களுக்கு முன் சாத்தியமில்லை என ஒத்திப்போடப்பட்ட விசயம் இன்று விசுவரூபமாய் நம் முன் நிற்கிறது. குறுகிய நோக்கங்களுடன் உப்பிச்சப்பில்லாத காரணங்களுக்காக , தொலைநோக்குத் திட்டங்களை கிடப்பில் போடப்படாமல் செயற்படுத்தடும்பொழுது அடையும் பயன்களை பறைசாற்றும் நிகழ்கால சாட்சியாக இந்தப் பாலம் இருக்கிறது. இக்கட்டுரையை வாசிக்கும்பொழுது கீழ்கண்ட வரைபடம் உங்களின் நினைவுக்கு வராமல் இருக்காது.


இதே தொலைவு,இதே போல ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டாலும் தனித்தன்மை வாய்ந்த இனங்கள், ம்ம் பார்க்கலாம். பலசமயங்களில் வரலாறுகள் திருத்தி எழுதப்படுகின்றன. மீன் கொடியும் புலிக்கொடியும் பாலத்தின் மையத்தில் பறக்கும் காட்சியை ,நம் வாழ்நாளின் இறுதிப்பகுதிகளிலாவது பார்க்கும் வாய்ப்பு இருக்கும் என நம்புவோம்.

தரவுகள்
2. National Geograpic Channel - Mega Structures


சீதை செஞ்ச லிங்கம் (ராமேஸ்வரம்)

ராமேஸ்வரம்

ஒரு அதிகாலை வேளையில் ராமேஸ்வரம் வந்திறங்கினேன். எல்லா நேரங்களிலும், மக்கள் வந்திறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் லாட்ஜுகள், விதவிதமான பெயர்களில், விதவிதமான வசதிகளுடன். வட இந்தியர்கள் அதிகம் வரும் இடமென்பதால், அந்தந்த மாநிலத்தவர்கள் நடத்தும் விடுதிகளும் உண்டு. இது எதுவுமே வேண்டாம். கடவுள் இருக்கிறார், கடல் இருக்கிறது என்று வெளிப்புறத்திலேயே உறங்குபவர்களும் உண்டு.



ராமேஸ்வரம் ஒரு தனித்தீவு. சாலை வசதி, ரயில் வசதி இரண்டுமே இருப்பதால், அந்த எண்ணம் ஏற்படுவதில்லை. இந்த ஊர் சொல்லும் புராணக்கதை சூப்பரானது. பேமஸானது. சர்ச்சைக்குள்ளானது. அதாவது ராமர் இங்கிருந்து தான் இலங்கைக்கு சென்று ராவணனுடன் போரிட்டு, சீதை மீட்டு வந்தார். அதற்காக, அவர் இலங்கைக்கு அமைத்த பாலம் இங்கிருந்து தான். பாலம் கட்ட உதவிய அணிலை, பரிவுடன் தடவி கொடுக்க, அதன் முதுகில் ஏற்பட்ட மூன்று கோடுகளைப் பற்றி தெரிந்திருக்குமே? அந்த அணிலுக்கு சொந்த ஊர், இதுதான்.



போரில் ராவணன் என்ற பிராமணனைக் கொன்றதால் உண்டான தோஷத்தைக் கழிக்க, இங்கு ஒரு லிங்கத்தை அமைத்து, பூஜிக்க வேண்டிய அவசியம் ராமனுக்கு ஏற்பட்டது. இதற்காக லிங்கத்தை கொண்டு வர அனுமனை ராமர் அனுப்ப, அவர் திரும்பி வர நேரமாகிவிட்டது. இந்த நேரத்தில், தன் கையாலேயே கடற்கரை மண் கொண்டு ஒரு லிங்கத்தை சீதை உருவாக்க, அந்த லிங்கத்திற்கே பூஜை செய்தார். திரும்பி வந்த அனுமனுக்கு வருத்தம். 

நம்ம கொண்டு வந்த லிங்கத்தை கண்டுக்கொள்ளவில்லையே? என்று. இதனால், அவர் தன் மன வருத்தத்தை ராமனிடம் சொல்ல, ராமன் அந்த மண் லிங்கத்தை அசைத்து பார்க்க சொல்ல, அனுமன் அசைத்து பார்த்து முடியாமல் போக, சீதை உருவாக்கிய மண் லிங்கத்தின் அருமை புரிந்தது. அது தான் ராமேஸ்வர கோவிலில் இருக்கும் லிங்கமாம். அனுமன் கொண்டு வந்த லிங்கமும் பக்கத்தில் இருக்கிறது.

இந்த கதையை கோவிலில் பெரிய பெரிய வண்ணப்படங்களாக வரைந்து வைத்துள்ளார்கள். ஸ்பான்சர்களுடன் தான். இந்த மாதிரி கோவிலில் படம் வரைந்து கதை சொல்லும் உத்தி எனக்கு பிடித்த விஷயம்.



கோவில் முழுக்க, ஊர் முழுக்க வட இந்தியர்கள் தான். அதுவும், வந்திருந்த பெரும்பாலோர் வசதியானோர் அல்ல. கூட்ட கூட்டமாக சென்றனர். இங்கிருந்து தனுஷ்கோடிக்கு சொற்ப பஸ்களே ஓடுகிறது. இவர்களுடைய ஒரு கேங் ஏறினால், பஸ் நிறைந்து விடுகிறது. கண்டக்டர், செக்கிங் இன்ஸ்பெக்டர், தெருவோர விற்பனையாளர்கள் அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள். கண்டக்டர், வட இந்தியர்களை உதாரணம் காட்டி, நம்மவர்களை பஸ்ஸில் ஒழுங்காக நிற்க சொல்கிறார். இந்த ரூட் பஸ்ஸை கொஞ்சம் அதிகம் விடலாம். அட்லீஸ்ட், தேவையான நேரங்களில் இருக்கும் கூட்டத்திற்கேற்ப. கூட்டமாக இருக்கிறதே என்று ஒரு பஸ்ஸை விட்டுவிட்டு, அடுத்த பஸ்ஸிற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்!



தனுஷ்கோடி. நமக்கு சமீபத்தில் வந்த சுனாமி பற்றி தான் தெரியும். இதே போல், 1964 வருட டிசம்பரிலும் ஒரு சுனாமி தமிழகத்தை தாக்கியது. அதில் தாக்குண்டு வெறும் மண் மேடாகி போன ஊர் தான், தனுஷ்கோடி. இந்த அழிந்த ஊரை சுற்றி பார்க்க, ஜீப்கள் வாடகைக்கு கிடைக்கிறது. இங்கு ஒரு பாழடைந்த தேவாலயத்தைக் காணலாம். இந்த ஊர் போகும் வழியில், சாலையில் இரு பக்கமும் கடலை காணலாம்.



பாம்பன் பாலம் என்றாலே அதை கட்ட உதவிய சிமெண்ட் தான் பலர் நினைவுக்கு வரும். அவர்கள் தான் அந்த பாலத்தை விளம்பரம் மூலம் பிரபலம் செய்தவர்கள். சமீபத்தில் மும்பை கடலில் கட்டப்பட்ட ராஜீவ் காந்தி பாலத்திற்கு, அன்னை இந்த இந்திரா காந்தி பாலம். பக்கத்திலேயே இருக்கும் ரயில் பாதை, பெரிய கப்பல்கள் செல்ல ஏதுவாக ஏற்றி இறக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் சென்றதால், இங்கு இறங்கி பார்க்க முடியவில்லை. பஸ்ஸில் இருந்தே எடுத்த போட்டோ.



இந்தியாவில் தரிசிக்க வேண்டிய 12 லிங்கங்களில், தமிழகத்தில் இருக்கும் ஒரே லிங்கம் ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலில் தான் அமைந்துள்ளது. மற்ற ஊர்களுக்கு போக முடிகிறதோ, இல்லையோ, பக்கத்தில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு போயிட்டு வந்துடுங்க.

சேது சமுத்திர திட்டத்திற்காக, அது தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரும் என்று சொல்ல பட்ட தொழிற் வாய்ப்புக்களுக்காக, எப்போது ஆரம்பிக்கும், நிறைவு பெறும் என்று துவக்கத்தில் எதிர்ப்பார்த்திருந்தேன். பிறகு, அதனால் கடலின் சுற்றுசுழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி சொல்லப்பட்டது. இன்னமும், அது பற்றிய உண்மை நிலை தெரியவில்லை. ஆனால், விஞ்ஞான ரீதியாக சொல்லப்படும் காரணங்களால் நிறுத்த முடியாமல் போன திட்டம், ராமர் பெயரை சொல்லி நிறுத்தப்பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, எல்லா அரசுகளுமே கடவுளுக்கு பயப்படுகிறது. அட்லீஸ்ட், ஓட்டு வங்கி நம்பிக்கைக்காக.

நன்றி
சரவணகுமரன் குமரன் குடில் http://www.saravanakumaran.com/2010/05/blog-post_5860.html

சனி, 18 டிசம்பர், 2010

COLLATERAL MURDER

அமெரிக்க அட்டூழியங்கள்




Collateral Murder காணொளி மட்டும் இங்கே!
இதன் மீதான கருத்துக்களை மிக சுவாரசியமாக 
http://suduthanni.blogspot.com ல்
எழுதியுள்ளார்  

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மூன்று வாய்ப்புகள்!!!

தினமலர் பெட்டி செய்தியில் பார்த்து படித்து ரசித்தது



நன்றி

தினமலர்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

பாண்டியனின் துறைமுகம் உய்யலாலா!!!

கொற்கை, பாண்டிய ராஜ்யத்தின் துறைமுக நகரம் என்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவரும் பாடப்புத்தகம் மூலம் படித்திருப்போம்.ஆனால் எத்தனை பேருக்கு அந்த ஊரின் தற்போதைய நிலை தெரியும்? கொற்கை, தற்போது ஒரு சிறிய கிராமம். நான் சிறு வயதில் இருந்து, பல முறை அந்த ஊருக்கு அருகே வரை சென்றிருக்கிறேன். ”கொற்கை - 3 கி.மீ.” என்று எழுதியிருக்கும் பலகையை பலமுறை கடந்தும், அந்த ஊருக்கு இதுவரை சென்றதில்லை.

சமீபத்தில் மீண்டும் ஒருமுறை அந்த 3 கி.மீ. போர்ட்டை கடக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இம்முறை கண்டிப்பாக அந்த ஊரில் என்ன தான் இருக்கிறது? என்று பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

போன வேலையை முடித்துவிட்டு, பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். எங்கே என்று கேட்டவர்களிடம், கொற்கை என்றால், அங்கு என்ன இருக்கிறது? என்பது பதில் கேள்வியாக இருந்தது. ”பழைய காலத்து ஊராச்சே, என்ன இருக்கிறது என்று பார்க்க போகிறேன்” என்றால், “அங்கு ஒன்றும் இல்லை” என்பது பதிலாக இருந்தது. இருந்தாலும், போகாமல் சும்மா இருக்க பிடிக்கவில்லை. அப்படி என்ன தான் அங்கு ஒன்றும் இல்லை என்று பார்க்க கிளம்பிவிட்டேன்!

---

கொற்கை முன்பு துறைமுகமாக இருந்தாலும், இன்று கடல் பக்கத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது எப்படி துறைமுகமாக இருந்தது என்பது என் பழைய ஆச்சரியம். இணையத்தில், தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களை வாசித்தப்போது சிறிது புரிந்தது. எவ்வளவு மாற்றங்கள்? இன்னும், எவ்வளவு மாறுமோ?

முன்பு, கொற்கை பக்கமாக தாமிரபரணி பாய்ந்து கொண்டிருந்ததாம். ஆறு வழியாக, கடலுக்கு பாதை. இன்று ஆறும் இல்லை. கடலும் இல்லை. ஆனால், ஊரில் எந்த இடத்தை தோண்டினாலும், கடல் இருந்ததற்கு அத்தாட்சியாக சிப்பிகள், சங்குகள் கிடைக்கிறதாம்.

---



போகும் வழி, வாழைத் தோட்டங்களால் நிறைந்திருந்தது. மண் வாசம் அருமையாக இருந்தது. கொற்கைக்குள் வந்துவிட்டேன். வழக்கமான கிராமமாகத்தான் இருந்தது.

ஒரு பெரியவர் அருகே சென்று நிறுத்தி விசாரித்தேன். அவர் சொன்னது,

“பழைய காலத்து அம்பு, வில், பானை பொருட்களை காட்சிக்கு வைத்து காட்ட ஒரு இடம் இருந்தது. ஒரு ஆபிசரும் இருந்தார். ஆனா, இப்ப கொஞ்ச நாள் முன்னாடி, யாரும் இங்கு வருவதில்லை என்பதால் அது திருநெல்வேலிக்கு இடம் மாறியது. இப்ப, இங்க எதுவும் கிடையாது. கொஞ்ச தூரம் போனா, ஒரு பழைய பிள்ளையார் கோவில் இருக்கிறது. அவ்வளவுதான்.”

அந்த கோவிலுக்கு வண்டியை விட்டேன். சின்ன கிராமத்து சாலை. இடது பக்கம், வழக்கம் போல் வாழைத்தோட்டம். வலது பக்கம், நீர் இல்லாத குளம் போல் இருந்தது.



சிறிது தூரத்தில், வாழைத்தோட்டத்துக்கிடையே, எப்போது வேண்டுமானாலும் கீழே விழும்வாறு, ஒரு சிறிய வளைவு இருந்தது. அதில் “பழமையான கொற்கை அக்காசாலை ஸ்ரீஈஸ்வரமுடையார் திருக்கோவில் விநாயகர் ஆலயம்” என்று எழுதியிருந்தது. இதிலேயே ‘பழமையான’ என்று எழுதியிருந்தாலும், இந்த வளைவே ரொம்ப பழமையாக இருந்தது! வளைவின் இரு பக்கமும் பாண்டிய ராஜ்ஜியத்தின் சின்னமான மீன் இருந்தது.


உள்ளே இருந்த கோவில், மதிய நேரமென்பதால் சாத்தியிருந்தது. சிறிய கோவில் தான்.


வாசல் முன்பு, தோட்டத்தில் வேலை செய்பவர்கள், மதிய உணவருந்திக்கொண்டிருந்தனர். பிரதான வாசல் மூடியிருந்தாலும், வலது பக்கம் கோவில் வளாகத்திற்குள் நுழைய ஒரு வழி இருந்தது. இதை முன்னால் இருந்தவர்கள் சொன்னார்கள்.


ஏரியாவே அமைதி. கோவிலுக்குள் இன்னமும் அமைதி. பசுமை சூழ்ந்த ஒரு கோவிலுக்குள், அமைதியான சுழலில் நான் மட்டும். புராதன கோவில் என்று சொல்ல முடியாது. சிறியதாக இருந்ததை சுற்றி எழுப்பியிருக்கலாம். முன்பக்க சுவர் முழுக்க, கல்வெட்டுக்கள்.


பின்புறம் ஒரு பாதி மரம் இருந்தது. கேட்க கேள்விகள் நிறைய இருந்தாலும், பதில் சொல்ல ஆளில்லாததால், கேள்விகளை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன்.





---


திரும்பி வந்துக்கொண்டிருந்த போது, எதிரே ஒரு பாட்டி வந்துக்கொண்டிருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசினேன். அவர் குளம் போல் இருந்ததை காட்டி, இது தான் பாண்டிய காலத்தில் தோணித்துறையாக இருந்ததாக நம்பிக்கை என்றார்.


அதனுள் ஒரு கோவில் இருந்தது. அம்மன் கோவில். பாட்டி இந்த கோவிலும் பழமையானது என்றார். ஆனால், பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. நான் போன நேரம், இந்த கோவிலும் பூட்டி கிடந்ததால், உள்ளே செல்ல முடியவில்லை.


கோவில். கோவிலைச் சுற்றி தண்ணீர் இல்லாத குளம். ஒரு பெரிய மரம். மரத்தடியில் பெண்கள் கூட்டம் ஒன்று உட்கார்ந்து ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார்கள். மரம் என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த ஊரில் 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு வன்னி மரம் இருப்பதாக படித்திருக்கிறேன். ஆனால், அதை நான் பார்க்க, கேட்க மறந்துவிட்டேன். ஒருவேளை, பார்த்திருக்கலாம். வன்னி மரம் எதுவென்று தெரியாததால், உறுதி செய்ய முடியவில்லை.

---

”என்னடா, கொற்கை பார்த்தியா? என்ன இருந்துச்சு?”

“முன்ன, ஒரு ஆபிசரும் பழைய காலத்து பொருட்களும் வச்சிருந்தாங்களாம். இப்ப, யாரும் வருறது இல்லன்னு, திருநெல்வேலிக்கு கொண்டு போயிட்டாங்களாம்.”

“ஆமா! இப்ப யாரு அதையெல்லாம் பாக்குறா? தமன்னா வந்திருக்கா’ன்னு சொல்லு, எங்கிருந்துனாலும் ஓடி வருவானுங்க!”

---

செல்லும் வழி - தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பஸ்ஸில் ஏறினால், முக்காணியில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். இங்கிருந்து ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் இருக்கும். மினி பஸ் இருக்கும் என நினைக்கிறேன். முக்காணி வழியில் ஏரல் செல்லும் பஸ்ஸில் ஏறினால், உமரிக்காடு என்னும் ஊரில் இறங்கி செல்லலாம்.
********************** 
திருடன் கையில் சாவி!!!!!!!!!!!
முக்கியமான தகவல்
இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.


http://www.saravanakumaran.com/
இத அவரே தான் சொல்லியிருக்காரு
***
எனது மறுமொழியும் அவரின் பதிலும் 

சு.மருதா said...

மூவேந்தர்களின் துறைமுக நகரங்களில் தொண்டி'ய அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்ததால் பார்த்துவிட்டேன்.உம்மால் இன்று யாம் எமது கொற்கையை கண்ணுற்றோம் மிக்க நன்றி,அப்பிடியே கொஞ்சம் முசிறி பக்கம் போன ஒரு பதிவு எழுதிருங்க!!!!!

சரவணகுமரன் said...

நன்றி மருதா. முசிறி பற்றிய தகவலுக்கு நன்றி.
குடிலுக்கு சொந்தக்காரருக்கு நன்றி!!!!!




.

அன்பிலும்....,ஏழையின் சிரிப்பிலும்....,!!!

கடவுளும், நானும்



எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேர்ந்தது கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்ற அம்மாவின் அழைப்பு. தீவிர ஆத்திகனாக இல்லாத போதும் ஆலயங்களுக்குச் செல்வது எனக்கு எப்போதுமே உறுத்திக் கொண்டிருக்கும் நிகழ்வு. அங்கு செல்வதால் மன அமைதி கிடைக்கும் என்பதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை. கோயிலின் திருவிழாக்காலத்தில் மட்டும் உடன் வர அழைப்பதால் நானும் செல்வது வழக்கமாகிவிட்டது. அம்மாவை கோவிலில் விட்டு விட்டு அங்கு இருக்கும் கடைத்தெருக்களில் சுற்றி அப்பளம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது உள்ளே எனக்கான அர்ச்சனை நடந்து கொண்டிருக்கும்.



திருவிழா என்றுமே அழகானதுதான். கொளுத்தும் வெயில் காலத்தில் ரோட்டை மறைத்துப் போடப்பட்டிருக்கும் பந்தலில் கீழே, கடந்து செல்லும்போது வீசும் சிலநொடி தென்றலுக்காகவே அவ்வழியில் செல்வதுண்டு. குடும்பம் சகிதமாக கடைத்தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் தருணங்கள் மக்களுக்கு வாய்ப்பது திருவிழாக் காலங்களில்தான்.

ஆனால் நமது பார்வையில் திருவிழா ஒரு வித்தியாசமான ஒன்றுதான். அலுவலகத்தின் அருகிலேயே கோயில் இருப்பதால் செல்லும் வழியில் திருவிழாக்கூட்டத்தின் கலர்களைப் பார்ப்பது காலைப்பணிகளில் ஒன்றாகி விட்டதால் அங்கு மட்டும் வண்டியின் வேகம் குறையும். ஆனால் உடன் வரும் உத்தமர்கள் கோயிலின் முன் வந்ததும் கையை விடுத்து கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். அப்போது எதிர்பாராமல் எதிர்ப்படுபவர் மீது இடித்து விட்டால் அவ்வளவுதான். அவர்கள் பக்தியின் வீரியம் வாய் வழி வெளிப்பட்டு விடும்.

மஞ்சள் நீர் ஊற்ற வரிசையில் நிற்கும் போது 'எதற்காகவும் இவ்வளவு நேரம் நின்றதில்லை' என்பதுதான் என் பேச்சாக இருக்கும். முன் பின் நிற்கும் சில பெண்கள் கால் வலியினால் காலை மாற்றி மாற்றி ஒற்றைக்காலில் நிற்கும் போது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வாங்கிக் கட்டியுமிருக்கிறேன்.


அன்றும் எப்போதும் போல, கட்டாயப்படுத்தி கோவிலினுள் அழைக்காமல் அவர் மட்டும் செல்ல திருவிழாக் கடைத்தெருவில் மெல்ல நுழைந்து சென்றுகொண்டிருந்தேன். அன்று வெயிலின் தாக்கம் மிகுவாய் ஓங்கியிருந்தது. ஆங்காங்கு குளிர்பானக் கடைகளும், பழக்கடைகளும் தென்பட்டாலும் மனது கரும்புச்சாறு அரைக்கும் கடையைத்தான் தேடியது. கரும்புச்சாறு குடிக்கும்போது ஏற்படும் உடலுக்கும் மனதுக்குமான குளிர்ச்சி வேறுவகையான குளிர்பானங்கள் தராது என்பது உண்மைதான். அலுவலகத்திலும் தேநீருக்குப் பதிலாக இதை வாங்கிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. ஒரு தம்ளர் வாங்கிக் குடித்ததும் வெயில் சிறிது நேரம் கண்களுக்கு இதமாகத் தெரிந்தது.

வீட்டிற்கு வாங்கிச்செல்வதற்காக தீர்ந்து போன தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு காத்திருந்தேன். மெதுவாய் கையை பிடித்து அண்ணா... அண்ணா... என்று ஒரு சிறுமி இழுத்துக் கொண்டிருந்தாள். முற்றிலுமாக பழுப்பேறிய தலைமுடியுடன், வியர்வையில் நனைந்திருந்தாள். ஒருவிதமான கரகரத்த குரலுடன் அவள் அழைத்த தொனியே மனதைக் குடைந்தெடுத்தது. கையிருக்கும் பத்தையைா இருபதையோ திணித்து விட்டு சென்றிருக்கலாம். ஏதோவொன்று தோன்ற கையில் வாங்கிய கரும்புச்சாற்றை அவளிடம் தந்து விட்டு நகர்ந்தேன்.

கோவிலுனுள்ளே சென்ற அம்மா திரும்பிவர, அவர்களுடன் கடைத்தெருவில் சுற்ற ஆரம்பிக்கும்வரை நினைவில் அகலாமலிருந்தது அந்த சிறுமியின் முகம். சிறுவனாய் நான் அடம்பிடித்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கிய கடைத்தெருவில் இன்று அவள் கடவுள் உருவம் பொறித்த கழுத்தணிகளை வாங்கிக் கொண்டிருந்தாள். எனக்கும் ஒன்று தர மெலிதாய் சிரித்து அணிந்து கொண்டேன்.

வீட்டிற்குச் செல்ல வண்டியை கிளப்பிய சமயம், சாலையோர சுற்றுச் சுவரின் நிழலில் அமர்ந்திருந்தாள் அச்சிறுமி. அவளைவிட வயதில் சிறிய குழந்தை ஒன்றிற்கு கரும்புச்சாற்றை ஊட்டிக்கொண்டிருந்தாள். குடிக்கும் போது, வெயிலில் கருத்த அக்குழந்தையின் கழுத்து வழி வழிந்து கொண்டிருந்தது கரும்புச்சாறு. 

ஏனோ மனது கனத்தது. இல்லை இல்லை என்று நினைத்திருந்தேன். அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".








 



சனி, 27 நவம்பர், 2010

இவரு தான் இந்த பிளாக் எழுத இன்ச்பிரேசன்!!!!!


உன்னைவிட நல்லவன்?


ஒருவர் இறந்த பின்னர் மக்கள் அவரைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். குரு தன் சீடரை அழைத்து,
நீ சென்று இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்று பார்த்துவா என்றார்.

திரும்பிய சீடர், குருவிடம் சொன்னார்.

குருவே இறந்தவர் சொர்கத்துக்குத் தான் செல்கிறார் என்று.

குருவைப் பார்க்க வந்த ஒருவர் இதனைப் பார்த்து வியப்படைந்தார்.
ஒருவர் இறந்தபின்னர் சொர்க்த்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்பதைப் பார்க்கமுடியுமா? என்று குருவிடம் கேட்டார்.

குரு சொன்னார்,

ஒருவரின் இறுதி ஊர்வலமே இறந்தவரின் வாழ்க்கைக்கான அடையாளம். அவர் நல்லவரா? தீயவரா? என்பதை அவருக்குப் பின் செல்லும் மக்கள் பேசிச் செல்வர். அவர்கள் இவரைப் பற்றி உயர்வாகப் பேசினால் இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறார் என்றும், அவரைப் பற்றி இழிவாகப் பேசினால் அவர் நரகத்துக்குப் போகிறார் என்றும் உணர்ந்து கொள்ளலாம் என்றார் குரு.

சொர்க்கம்,நரகம் இரண்டும் மனித நம்பிக்கையின், நெறி்ப்படுத்தும் முயற்சியின் அடையாளங்கள்.

பாரதியார் இறந்த பின்னர் அவர் உடலில் மொய்தத் ஈக்களின் எண்ணிக்கை கூட அவரைப் பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கை இல்லை!

பாரதியார் நல்லவரா? தீயவரா?

பாரதி சொர்க்கத்துக்குச் செல்வாரா?
நரகத்துக்குச் செல்வாரா?

பாரதி நல்லவர் தான்! அவர் சொர்கத்தில் தான் வாழ்கிறார்.
ஆம் இன்னும் அவரின் சிந்தனைகள் மறையவில்லையே.
மக்களின் மனம் என்னும் சொர்க்கத்தில் தானே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி நல்லவர் தீயவர் என்பதற்கான வரையறை நிலையானதல்ல.

நல்ல பண்புகளைக் கொண்ட ஒருவரை தீயவராக எண்ணுதலும்
தீய பண்புகளைக் கொண்ட ஒருவரை நல்லவராக எண்ணுதலும் இவ்வுலகத்தின் இயல்பு.

ஒருவரின் மரணத்தி்ன் பின்னரே அவர் நல்லவர், தீயவர் என்பதை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வர்.


கரிகாலன் சேரலாதனைப் போரில் வென்றான்.
சேரலாதன் தன் மார்பில் தைத்த வேல் முதுகு வழியே வந்ததால் புறப்புண் என நாணி வடக்கிருந்தான்.

இருவரில் யார் நல்லவர்?

இதனை உணர்த்துகிறது இப்பாடல்,

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!

66. புறநானூறு.
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை : அரச வாகை.


நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே!

மதங்கொண்ட ஆண்யானையை உடைய கரிகால் வளவனே!

போருக்குச் சென்ற நீ ஆற்றல் தோன்ற வெற்றி கண்டாய்!

புதுவருவாயையுடைய வெண்ணியில் ஊர்ப்புறத்தில் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பி, புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் உன்னை விட நல்லவன் அல்லவா?


பாடல் உணர்த்தும் கருத்து.


­1. அரசனின் இயல்பு கூறும் அரசவாகை என்னும் புறத்துறை சுட்டப்படுகிறது.

­2.காற்றினை ஏவல் கொண்டு மரக்கலத்தைச் செலுத்தியும், காற்றில்லாதபோது அதனைத் தம் ஆளுகைக்கு உட்படுத்தி மரக்கலத்தைச் செலுத்தும் சோழரின் மாண்பும்,

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

என்னும் அடிகளால் உணர்த்தப்படுகின்றன. இதனால் பழந்தமிழரின் கடல் வணிகமும், கப்பல் செலுத்தும் அறிவும், ஆற்றலும் புலப்படுகின்றன.
­
3. எல்லா வெற்றியும் வெற்றியல்ல!
எல்லாத் தோல்வியும் தோல்வியல்ல!
ஒவ்வொரு வெற்றிக்குள்ளும் ஒரு தோல்வி உள்ளது!
ஒவ்வொரு தோல்விக்குள்ளும் ஒரு வெற்றியுள்ளது!

என்னும் அறிய வாழ்வியல் தத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.


4.போரில் வென்ற சோழனின் வெற்றியை விட,

போரில் தோற்றாலும் மானத்துக்கு அஞ்சி உயிரைவிட எண்ணும் சேரலாதன் நல்லவனாகப் புலவர் கண்ணுக்குப்படுகிறான்.

இப்புலவர் சொல்கிறார் கரிகாலனே நீ நல்லவனே!
ஆனால் உன்னைவிட நல்லவன் சேரன்!

என்று.

5.வாழும் போது நம்மை யார்யாரே நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்வார்வகள்.

நாமும் நம்மைப் புகழும் போது அகமகிழ்ந்தும், இகழும் போது வருந்தியும் வாடுவோம்.

நாம் நல்லவர் என்பதும் தீயவர் என்பதும் அவர்களின் வார்த்தையிலில்லை.
நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறதே என்னும் வாழ்வியல் நுட்பமே இப்பால் உணர்த்தும் கருத்தாக அமைகிறது.